பத்திரிகைகளின் பாராட்டு - வீரம் செறிந்த இஸ்லாம்
* ஒரேசமயத்தில் தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் செய்யப்பட பெரும் தொண்டு இது - சமரசம் மாதமிருமுறை
* இஸ்லாமிய பெரியோர்கள் நடத்திய வீரப்போர்கள் பற்றிய விரிவான விவரங்கள் இந்த நூலில் தொகுக்கபட்டுள்ளன. நூலாசிரியர் கவிஞர் ஆகவும் இருப்பதால் அழகான கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளது. - தினத்தந்தி - நாளிதழ்
* இஸ்லாத்தை வளர்ப்பதற்கு நடந்த வீரப் போராட்டங்களை சரித்திரப் பூர்வமாக சொல்கிறது - குமுதம் வாரஇதழ்
* எழுத்துலகில் இது நல்ல சாதனை ! தமிழ் அறிவுலகுக்கு நல்லதோர் பரிசு ! புத்தகத்தின் மதிப்பையும் விலையையும் ஒப்பிடும்போது இது ஒரு மலிவுப்பதிப்பு -மறுமலர்ச்சி வாரஇதழ்
* வீரம் செறிந்த எழுத்தில் ,வீரம் செறிந்த உணர்வில் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட நூல் வீரம் செறிந்த இஸ்லாம் .வீரத்தைப் போலவே வலுவான நூல்.ஒரு கவிஞராகவும் நூலாசிரியர் இருப்பதால் தமிழ் துள்ளி விளையாடுகிறது, நூல் முழுக்க.
-முஸ்லிம் முரசு ,மாத இதழ் .
* ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் மேலும் பல அபூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் அளவிற்கு கருத்துமிக்கதாக அமைந்துள்ளது ,இந்த நூல்.
* வாள்கொண்டு அச்சுறுத்திப் பரவியதல்ல இஸ்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டான இந்த நூல், ஒருவர் மற்றொருவருக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்து இறும்பூது எய்தத்தக்க்து என்றால் அது மிகையல்ல.- இஸ்மி ,வக்ப் வாரிய மாத இதழ் .
* வரலாற்றை ஆய்வுசெய்ய விரும்பும் வல்லுனர்களுக்கும் ,முஸ்லிம்களின் முன் மாதிரிகளைப் புரிந்துகொள்ள விரும்புவோர்க்கும் இந்த நூல் அறிவுக்களஞ்சியம் ஆகும் -முஸ்லிம் குரல் ,மாத இதழ் .
* இந்த நூலின் அருமை பெருமைகளை விளக்கவும் முடியுமோ ! -நர்கிஸ்,மாத இதழ் .
* இந்த நூல் ஆயிரம் ஆண்டுகாலப் பொக்கிஷத்தை நம் கையில் தந்திருக்கிறது - ஜமாத்துல் உலமா ,மாத இதழ் .
=========================================================
வீரம் செறிந்த இஸ்லாம் -ஓர் ஆழ்ந்த பார்வை
அல்லாஹ்வின் பேருதவியினால் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் எழுதிய 'வீரம் செறிந்த இஸ்லாம்'எனும் நூலைப்பற்றி உரிய முறையில் அறிய வேண்டுமானால் ,வீரம் குறித்து உலக வரலாறு செய்து வைத்திருக்கும் பதிவுகளில் பார்வையை செலுத்துவது அவசியம்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ள வீரயுகங்களில் (ஹீரோயக் தீட்ஸ்) மெசபடோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீர யுகம் கி.மு. 3000 ஆண்டு பழமையானது.கீர்திப்பிரதாபம் மிக்க கிரேக்க நாட்டின் வீரயுகம் கி.மு. மூவாயிரம் ஆண்டு கள் பழமையானது.புலவர் பாடிய புகழுக்குரிய பழந்தமிழர் வீரயுகம் கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில் எழுந்தது. மிகவும் பிற்காலத்தது ஆன பிரிட்டிஷ் வீரயுகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சிறந்திருந்தது.
பொதுவாகவும் மிகுதியாகவும் வீரத்தின் புற நிலைப் பண்புகளையே முன்னிறுத்தி வரலாற்றில் புகழ் பெற்றிருந்த கால கட்டங்களைப் பற்றிக் கூறும் ஆய்வுகளில் ஏனோ அரபு நாட்டின் வீரயுகம் பற்றி இடம் பெறவில்லை.
ஈராயிரம் ஆண்டுப்பழமையான தாக எண்ணப்படும் 'ஒல்காப் புகழுடைய தொல்காப்பியம்',
"கல்வி ,தறுகண் ,இசைமை,கொடைஎனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே "
என்று வகுத்தளித்த இலக்கணமே புறநிலைப் பண்புகளுடன் மட்டுமின்றி வீரத்தை (பெருமிதத்தை) அக நிலைப் பண்புகளுடனும் தொடர்புபடுத்தி ஓர் அருமையான புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்த பேராசிரியர் பிலிப் கே.ஹிட்டி, 1927 முதல் 1937 வரையில் பெரிதும் உழைத்து எழுதிய "ஹிஸ்டரி ஆப் அராப்ஸ் "எனும் நூலில் (பக்கம் 142) "அரேபியா தரணியை வெல்லும் முன் தன்னை வல்லவேண்டி இருந்தது"என்று கூறியதன் மூலம் வீரத்தின் அகநிலைப் பண்புகளில் ஒன்றான "தன்னை வெல்லும் வீரம்"தரக்கூடிய வெற்றியை மிகவும் அழகாகக் கூறியுள்ளார் என்றாலும் ,அது இஸ்லாம் எனும் மார்க்கம் அளித்த மாண்பு என்பதை அவர் சிறப்பித்துக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பொதுவாக உலக வரலாறு வியந்துரைக்கும் வீரமெல்லாம் ஒரு கால கட்டத்திற்கு உரியதாக ,ஏதேனும் ஓர் இன,நில,மொழி மக்களுக்கு உரியதாக,காலப்போக்கில் கடந்த கால வரலாறாக இருப்பது கண்கூடு.அவ்வக் கால கட்டங்களில் -வீரயுகங்களில் -தோன்றிய வீரநிலை இலக்கியங்கள் பெரும்பாலும் போர்க்கள வெற்றி முதலான புறநிலைப் பண்புகளையே -போற்றுகின்றன.பரணி இலக்கியங்களின் பாதையும் இதுதான்.
ரியாதில் உள்ள சவூதி அரசர் பல்கலைக் கழகம்கூட செப்டம்பர் 2000-இல் தான் வீரத்தின் அகநிலைப் பண்புகளை ஆன்மீகக் கண்ணோட்டத்தோடு அடிக்கோடிட்டுக் காட்டுகிற "ஹீரோஸ் ஆப் இஸ்லாம்"என்னும் நூலை முதன்முதலில் வெளியிட்டுள்ளது .
இதில் சொல்லப்பட்டுள்ள வீரர்களின் வாழ்வைப் பற்றி
மட்டுமின்றி சொல்லப்படாத வீரர்களின் வாழ்வையும் கூட ஆராய்ந்து ,1987 -ஆம் ஆண்டிலேயே ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதி முடித்த அருமையும் புதுமையும் உள்ள நூல்தான் "வீரம் செறிந்த இஸ்லாம்!".
வீரத்தின் பல புறநிலைப் பண்புகளையும் ஒருங்கே புலப்படுத்துகிற ஆன்மீக வீரம் ,இன நில மொழி முதலான எல்லா எல்லைகளையும் கடந்து மானுடத்தின் மத்தியில் ஓர் இலட்சியம் ஏற்படுத்துகிற வீரம் ,அதுவும் யுகம் யுகமாகத் தொடரும் வீரம் ,நம்பும் தனிமனிதனுக்கும் அந்த நம்பிக்கையின்படி நடக்கும் சமுதாயத்திற்கும் குன்றாத வீரத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் வீரம் என்று ஒன்று உண்டு .அதுதான் "இஸ்லாத்தின் வீரம்"என்று முழங்கி,ஆழ்ந்த சிந்தனையோடு வெளியான நூல்தான் வீரம் செறிந்த இஸ்லாம்!
பல்வேறு பத்திரிகைகள் வியந்து பாராட்டிய நூல்."ஒரே சமயத்தில் இஸ்லாத்திற்கும் தமிழுக்கும் செய்யப்பட பெரும் தொண்டு இது "என்பது அந்த பாராட்டுக்களில் ஒன்று .
"வீரம் செறிந்த இஸ்லாம்"வெளிவந்தபோது ஓர் அமைதிப்புரட்சியைத் தொடக்கிவைத்தது. ஆம்!அதைப் படித்த பின்னர் இறைவன் அருளால் சிந்தனை மாற்றம் பெற்றவர்கள் உண்டு .அது தமிழறிந்த எவருக்கும் இஸ்லாம் மார்கத்தை எத்தி வைக்கும் உத்திக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து வருகிறது; இன்ஷா அல்லாஹ் என்றும் இருந்துவரும்.அது செய்திகளைச் சமர்ப்பிக்கும் விதம் பலராலும் பின்பற்றப்படுகிறது.இப்படிப் பற்ப்பல சிறப்புகளைப் பெற்றுள்ள இந்த நூலுக்கு இது ஒரு பதச் சோறுதான்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!- Izzath.